தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமை கொண்ட ஒருவராக விளங்கி வருபவர் உலகநாயகன் கமல் ஹாசன். பல படங்களை இயக்கிய இவர் 'ஹேராம்' என்ற திரைப்படத்தை தொடர்ந்து இயக்கிய திரைப்படம் தான் 'விருமாண்டி'.
இப்படமானது இரண்டு கோணங்களில் இரண்டு கதாபாத்திரங்கள் கதையை சொல்வது போல அமைந்திருக்கும். இந்த படமானது வெளிவருவதற்கு முன்பாகவே பல சர்ச்சைகளை சந்தித்த பின்னர்தான் மீண்டும் ரிலீஸ் ஆகி வெற்றிநடை போட்டது.
இந்நிலையில் இப்படத்தினுடைய படப்பிடிப்பின் போது இடம்பெற்ற சுவாரஸ்யமான சம்பவமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
அதாவது ஒரு நாள் பள்ளியில் கோர்ட் செட்டப் போல அரங்கம் அமைத்து 'விருமாண்டி' படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் மொத்த படமும் லைவாக பேசி நடித்ததால் எந்த விதமான சப்தமும் வரக்கூடாது என கமல் முதலே கூறியிருந்தாராம்.
ஆனால் அப்படி இருக்கையில் சூட்டிங் தொடங்கப்படும்போது எங்கேயோ பத்து பேர் பேசுவது போன்று ஒரு சத்தம் கேட்டதாம். உடனே கோபமடைந்த கமல் சார் மைக்கில் சைலன்ஸ் என்று கத்தினாராம்.
ஆனாலும் தொடர்ச்சியாக இவர் சொல்லச் சொல்ல அந்தச் சத்தம் ஆனது கேட்டுக் கொண்டே இருந்ததாம். எங்கிருந்துதான் அந்த சத்தம் வருகிறது என்று துணை இயக்குநர்கள் போய் பார்த்துள்ளார்கள்.
அப்போது அந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் ஸ்பெஷல் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்ததாகவும், சூட்டிங்கிற்கு இடையூறு இருந்தால் சீக்கிரம் வகுப்பை முடித்து விடுவதாகவும் அந்த ஆசிரியர் கமலிடம் கூறியிருக்கிறார்.
ஆனால் அதை கேள்விப்பட்ட நம்ம உலகநாயகனோ "படப்பிடிப்பினால் பாடம் நடத்துவதற்கு தடங்கல் ஏற்படக்கூடாது. எனவே படப்பிடிப்பை நான் தள்ளி வைத்துக் கொள்கிறேன்" என்று கூறி அந்த ஸ்பெஷல் கிளாஸிற்கு இடையூறு இல்லாமல் வழி வகுத்து கொடுத்திருந்தாராம்.
Listen News!