இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இருப்பினும் இந்த படம் பல தடைகளைத் தாண்டித் தான் வெளிவந்திருக்கின்றது.
அதாவது கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. இதனால் இப்படத்துக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்ததோடு, பல எதிர்மறையான விமர்சனங்களும் கிளம்பின.
மேலும் இந்த படம் மேற்கு வங்கத்தில் தடை செய்யப்பட்டது. அதேபோன்று இதனை வெளியிடுவது சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி தமிழ்நாட்டில் படம் வெளியான போதிலும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எடுத்த முடிவின் காரணமாக படம் திரையில் வெளியிடுவது உடனடியாக நிறுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு அடையாளம் தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து மிரட்டல் செய்தி வந்துள்ளது. இது குறித்து படத்தின் இயக்குநரான சுதிப்தோ சென், போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட நபருக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இருப்பினும் இதுவரை முறைப்படி புகார் கொடுக்காததால், இது குறித்து இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!