லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'லியோ'. ஒரு வாரத்தில் இப்படம் 461 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்படத்தை வெளியிடுவதற்கு முன்பு பல தியேட்டர்கள் படத்தை வெளியிட முன்வரவில்லை. வினியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து 80 சதவீதத் தொகை கேட்பதாகவும் அது தங்களுக்குக் கட்டுப்படி ஆகாது என்றும் தியேட்டர்காரர் மறுத்தார்கள். இந்நிலையில் கடைசி நேரத்தில் பல தியேட்டர்கள் 75 சதவீதத்திற்கு படத்தைத் திரையிட்டார்கள்
தியேட்டர்களில் வசூலிக்கும் தொகையை வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பிரித்துக் கொள்வதுதான் டிஸ்ட்ரிபியூஷன் முறை. உதாரணத்திற்கு ஒரு தியேட்டரில் ஒரு லட்ச ரூபாய் வசூலித்துள்ளது என்றால் வினியோகஸ்தர்கள் 75 ஆயிரம் ரூபாயும், தியேட்டர்காரர்கள் 25 ஆயிரம் ரூபாயும் பிரித்துக் கொள்வார்கள்.
'லியோ' படத்திற்கு 75 சதவீதம், 80 சதவீதம் என வினியோகஸ்தர்கள் பங்குத் தொகை போய்விட்டதால் தியேட்டர்காரர்களுக்கு இதனால் லாபமில்லை என தமிழ்நாடு தியேட்டர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத்தின் தயாரிப்பாளரான திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 'லியோ' படம் ஒரு வாரத்தில் 150 கோடி வசூலித்திருந்தால் அதில் 75 சதவீதம் என்ற கணக்கில் வினியோகஸ்தர் பங்காக சுமார் 110 கோடி வரை போயிருக்கும். தியேட்டர்காரர்களுக்கு வெறும் 40 கோடி மட்டுமே வந்திருக்கும். செலவினங்கள் போக அதில் லாபம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான் என்றும் திரையுலகில் சொல்கிறார்கள்.
ஒரு படம் பெரும் வசூலைக் குவித்து வெற்றி பெற்றால் அது தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர்காரர்கள் என அனைவருக்கும் லாபம் தந்தால் மட்டுமே வெற்றிப் படம் என்பதுதான் திரையுலகில் ஒரு கணக்கு இருக்கிறது. அந்த விதத்தில் 'லியோ' படம் தியேட்டர்காரர்களுக்கு லாபத்தைத் தருவதை விட நஷ்டத்தைத் தந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.
Listen News!