தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் வடிவேலு. பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ என பார்க்காமல் பலருடனும் சேர்ந்து நடித்த வடிவேலு சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் சூழல் உருவானது. இதனையடுத்து அவரை சுற்றி இருந்த பிரச்னைகள் பேசி தீர்க்கப்பட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
வடிவேலு தனது கேரியரின் உச்சத்தில் இருந்தபோது 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். அதிமுகவை டார்கெட் செய்ததைவிட தனது பரப்புரையில் விஜயகாந்த்தையே அதிகம் டார்கெட் செய்தார் . குறிப்பாக விஜயகாந்த் பயங்கரமாக குடிப்பார் என மேடைக்கு மேடை பேசினார். அவரது பேச்சு சில இடங்களில் ரசிக்க வைத்தாலும் பல இடங்களில் அதிருப்தியையே சந்தித்தது. தொடர்ந்து அந்தத் தேர்தலில் அதிமுக வென்றதை அடுத்துதான் வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் கம்மியாகின என்ற பேச்சு எழுந்தது.
இந்நிலையில் ரட்சகன், ஸ்டார், ஜோடி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரவீன் காந்தி தமிழ் பில்மிபீட்டிற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில் பேசிய அவர், "விஜயகாந்த்தை குடிக்காரர் என்று வடிவேலு சொன்னார். எனில் வடிவேலு குடிக்கவே மாட்டாரா. அவர் நன்றாகவே குடிப்பார். அவர் வடிவேலு இல்லை குடிவேலு என்றுதான் சொல்வார்கள். இன்றைய காலகட்டத்தில் 10, 12 வயது பசங்களே குடிக்கிறார்கள்.
அன்றைய காலகட்டத்தில் வடிவேலுவுக்கு கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டது. ஏனெனில் அவருக்கும் சிங்கமுத்துவுக்கும் மிகப்பெரிய பிரச்சினை ஓடிக்கொண்டிருந்தது. அதற்காகத்தான் விஜயகாந்த்தை தாக்கி பேசினார். வடிவேலு மாபெரும் கலைஞன். எனக்கென்று மட்டுமில்லை தமிழ்நாட்டுக்கே வடிவேலுவை பிடிக்கும். இளையராஜாவின் இசையும், வடிவேலுவின் நகைச்சுவையும் இல்லையென்றால் மக்கள் நிம்மதியாக இருக்கமாட்டார்கள். இவர்கள் இருவரும் இல்லையென்றால் எல்லோரும் மக்கள் கொதித்துப்போய் ரோட்டுக்கு வந்துவிடுவார்கள்.வடிவேலு பகலில் குடிக்கமாட்டார்.
வடிவேலு என்று இல்லை பெரிய கலைஞர்கள் யாருமே பகலில் குடிக்கமாட்டார்கள். வடிவேலுவிடம் இரண்டு லைன்கள் மட்டும்தான் சொல்லப்படும். அதை ஒரு சீனாக வடிவேலுதான் டெவலப் செய்வார். அதுவும் ஸ்பாட்டில்தான் அதை செய்வார். அப்படி இருக்கும்போது எப்படி அவரால் பகலில் குடிக்க முடியும். அப்படி குடித்தால் எப்படி டெவலப் செய்ய முடியும். விஜயகாந்த்துக்கென்று பெரிய நட்பு வட்டம் இருக்கிறது. உதாரணமாக வாகை சந்திரசேகர், தியாகு உள்ளிட்டோரை சொல்லலாம். விஜயகாந்த் காஸ்ட்யூமர், மேக்கப் மேனோடுல்லாம் அமர்ந்து குடிப்பார். அவருக்கு பாகுபாடு கிடையாது. நான் அதை கண்ணால் பார்த்திருக்கிறேன்.
பொள்ளாச்சியில் விஜயகாந்த்திடம் கதை சொல்ல நான் சென்றிருந்தபோது மேக்கப் மேனை துரத்தி துரத்தி விளையாடுவார் விஜயகாந்த். இப்போது எல்லாம் ஹீரோவும், மேக்கப் மேனும் ரொம்பவே தூரமாக இருக்கிறார்கள். விஜயகாந்த்தை இந்த நிலைமைக்கு குடி கொண்டுவரவில்லை" என்றார்.
Listen News!