நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர். இவர் பல ஆண்டுகளாக சினிமாத் துறையில் இருக்கிறார். இருந்தும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா” என்ற தொடரின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டார்.
அதில் பட்டாபி என்ற கதாப்பாத்திரத்தில் காது கேளாதவராக காதில் கை வைத்துக்கொண்டே நடித்திருப்பார். நகைச்சுவை கதாப்பாத்திரமாக அமைந்த இந்த வேடம் குழந்தைகளை மிகவும் கவர்ந்தது.
இதனை தொடர்ந்து சினிமாவில் மிக முக்கிய நடிகராக உயரத் தொடங்கினார். நகைச்சுவை கதாப்பாத்திரம், குணச்சித்திர கதாப்பாத்திரம் என இவர் நடிக்காத பாத்திரமே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு பன்முக கலைஞராக திகழ்ந்து வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட எம்.எஸ்.பாஸ்கர் தனது மன வேதனையை கொட்டித்தீர்த்துள்ளார். அதாவது ஒரு நாள் கோவிலுக்குச் சென்றபோது அங்கு ஒருவர் எம்.எஸ்.பாஸ்கரிடம் மிக நல்ல முறையில் சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தாராம். இவரும் முகமலர்ச்சியோடு அவரிடம் பேசிக்கொண்டிருந்தாராம்.
திடீரென அந்த நபர், ஒரு பேப்பரையும் பேனாவையும் கொடுத்து, “உங்கள் நம்பரை இதில் எழுதுங்கள்” என கூறியிருக்கிறார். இவர் “எதற்கு?” என்று கேட்டிருக்கிறார் அதற்கு அவரோ, “என் பையன் சினிமால நடிக்கனும்ன்னு ஆசைப்படுறான். அதான் வாய்ப்பு வாங்கி கொடுக்குறதுக்கு” என கூறியிருக்கிறார்.
அதே போல் ஒரு நாள் எம்.எஸ்.பாஸ்கர், அவரது தம்பி ஒருவர் மருத்துவமனையில் சீரீயஸாக இருப்பதாக தகவல் வர, மருத்துவமனைக்கு அவசரமாக போய்க்கொண்டிருந்தாராம். அப்போது ஒருவர் தன்னை தடுத்து நிறுத்தி, “சார் என் பொண்டாட்டிக்கு ஒரு சந்தேகம்” என கேட்டாராம்.
அந்த அவசரத்திலும் அவரிடம் “என்ன?” என்று கேட்டாராம். அதற்கு அந்த நபர் “நீங்க எப்பவுமே இப்படி காதுல கை வச்சிக்கிட்டுத்தான் இருப்பீங்களா?” என கேட்டிருக்கிறார்.
உடனே இவருக்கு கோபம் வந்துவிட்டதாம். “ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க, ஏன் இப்படி என்னை காயப்படுத்துறீங்க? என் தம்பி ஆஸ்பத்திரியில் சீரீயஸா இருக்கிறார், அவனை பார்க்க வந்தேன் அந்த இடத்தில இப்படி கேக்குறீங்களே” என கூறினாராம். இவ்வாறு தன்னை மக்கள் காயப்படுத்தினார்கள் என மிகவும் வேதனையோடு அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
Listen News!