தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த குஷ்பூ தறடபொழுது முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றார்.அந்த வகையில் கடந்த வாரம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்தச் சூழலில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஒரு குழந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யப்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் ஒரு வடுவாக இருக்கும். எனது அம்மாவுக்கு மிகவும் மோசமான திருமண வாழ்க்கைதான் அமைந்தது. மனைவியையும், குழந்தையையும் அடிக்கும் ஒரு குடும்பத் தலைவனாகத்தான் அப்பா இருந்தார்.
எனது அப்பா அவரது ஒரே மகளான என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். அது அவரது பிறப்புரிமை போல் நினைத்துக்கொண்டிருந்தார். எனக்கு 8 வயதாகும்போது என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய தொடங்கினார்' என தனது சிறு வயது வாழ்க்கை குறித்து ஓபனாக பேசினார். குஷ்பூவின் இந்தப் பேட்டி கடந்த சில நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.
சமீபத்தில் அளித்த பேட்டி குறித்து பேசிய குஷ்பூ, "நான் ஒன்றும் திடீரென அப்படி பேசவில்லை. நேர்மையாக நடந்ததை சொன்னேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. குற்றம் செய்தவர்தான் வெட்கப்பட வேண்டும். பெண்களோ, பெண் குழந்தைகளோ தங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும்.
அவர்கள் வலிமை மிக்கவர்களாக இருக்க வேண்டும். என்ன நடந்திருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி வெளிப்படையாக பேசிவிட்டு தங்களது பயணத்தை அவர்கள் தொடர வேண்டும்" என கூறியிருக்கிறார். குஷ்பூ சமீபத்தில் அளித்த பேட்டிக்கும் தற்போது கூறியிருப்பதற்கும் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது ஆதரவையும், வாழ்த்தையும் தெரிவித்துவருகின்றனர்.
Listen News!