தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இசையால் பல கோடி மக்களைக் கட்டிப் போட்ட இவர் இன்று தனது 43-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதுமட்டுமல்லாது தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான இசையால் 25 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக பயணித்து வருகின்றார்.
இந்நிலையில் இசை நட்சத்திரம் யுவனுக்கு சாதாரண மக்கள் முதல் திரைப் பிரபலம் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணமே இருக்கின்றனர். இந்நிலையில் இவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரின் பாடல் வரிகளைப் போல் நிஜ வாழ்விலும் அவருக்கு நடந்த மேஜிக் பற்றி பார்க்கலாம்.
அந்தவகையில் யுவன் சங்கர் ராஜா அம்மா மீது அலாதி பிரியம் கொண்ட ஒருவர். யுவனின் இசை பயணம் இந்த அளவுக்கு வெற்றிகரமாக அமைந்ததற்கு அவரின் தாயார் ஜீவாவும் ஒரு காரணம். அதாவது சினிமாவில் தோல்விகளையும், விமர்சனங்களையும் கண்டு துவண்டு போன யுவனுக்கு புத்துயிர் கொடுத்தது அவரது அம்மா தான்.
அந்த வகையில் 2011-ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு வீட்டிற்கு பயங்கர பசியுடன் வந்த யுவன், அனைவரும் தூங்கிவிட்டதால் தானே சமையலறைக்கு சென்று சமைக்க தொடங்கியுள்ளார்.
அப்போது திடீரென சத்தம் கேட்டு எழுந்து வந்த அவரின் தாயிடம், இன்னும் நீ தூங்கலையா என கேட்டுள்ளார் யுவன், அப்போது என் பையனுக்கு பசிக்கும் போது எனக்கு எப்படி தூக்கம் வரும் என சொல்லிவிட்டு அந்த நடு இராத்திரியிலும் தன் கையால் மகனுக்கு சமைத்து கொடுத்துள்ளார்.
தாயார் சமையல் செய்து கொண்டு யுவனுக்கு கொடுக்க வந்த சமயத்தில் டீவியில் 'ராம்' படத்திற்காக யுவன் இசையமைத்த “ஆராரிராரோ நான் இங்கு பாட தாயே நீ கண் உறங்கு...” என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்ததாம்.
இதைக் கேட்ட யுவனின் தாயார் உடனே "நீ போட்ட பாட்டிலேயே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு இதுதாண்டா" எனக் கூறியிருக்கின்றார். அதுமட்டுமல்லாது "நீ என்ன கையில் வைச்சு தாலாட்டி தூங்க வைக்குற மாதிரி இருக்குடா" எனவும் யுவனிடம் கூறியிருக்கின்றார்.
தாயார் இவ்வாறு கூறியதைக் கேட்டதும் யுவன் மிகவும் சந்தோஷப்பட்டாராம். ஏனெனில் தனது அம்மாவுக்காகத் தான் அந்த பாடலையே யுவன் இசையமைத்து இருந்தாராம்.
மேலும் 2005-ஆம் ஆண்டிலேயே வெளிவந்த அந்த பாடலை 6 ஆண்டுகள் கழித்து, தனக்கு மிகவும் பிடித்த பாடல் எனத் தன் தாயார் சொன்னதை கேட்டதும் யுவன் ரொம்ப மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறியிருக்கின்றார்.
இவ்வாறாக தன்னுடைய தாயின் பாராட்டை கேட்டு பூரிப்படைந்த யுவனுக்கு, அடுத்த 4 நாட்களிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது மகனை பாராட்டிய அடுத்த 4 நாட்களில் யுவனின் தாயார் ஜீவா மரணமடைந்து விடுகிறார். தாய் தான் தன்னுடைய உலகம் என்று இருந்த யுவனுக்கு அவரது இழப்பை தாங்கிக் கொள்ளவே முடியவில்லையாம்.
தாய் இல்லாமையினால் உலகமே இருண்டது போல் ஆகிவிட்டதால் அவரால் இசையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இதனால் 2011 முதல் 2013 வரை இரண்டு ஆண்டுகள் சரிவர இசையமைக்காமல் இருந்த யுவன் போதைப் பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறு அம்மாவின் பிரிவால் வாடி வதங்கி வந்த யுவனுக்கு அவரது அம்மாவின் பிறந்தநாள் அன்றே ஒரு அதிசயம் நடக்கிறது. அதாவது அவரது அம்மாவின் பிறந்தநாள் அன்றே யுவனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. இதுதான் அவரது வாழ்க்கையை மாற்றிய தருணம் என்றே கூற முடியும்.
அந்தவகையில் இவர் இசையமைத்த ஆராரிராரோ பாடலில் இடம்பெறும் “இறைவா நீ ஆணையிடு... தாயே எந்தன் மகளாய் மாற” என்ற வரிகளைப் போல் தனது தாயே தனக்கு மகளாய் வந்து பிறந்திருக்கிறார் என நினைத்து மிகுந்த உற்சாகம் அடைகிறார் யுவன். இந்த தருணம் யுவனின் வாழ்க்கையில் நடந்த ஒரு மேஜிக் என்றே கூட சொல்லலாம்.
இவ்வாறாக யுவனின் வாழ்க்கையில் நம்மில் பலருக்கும் தெரியாத பல சம்பவங்கள் இடம்பெற்றிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!